சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருவிசைப்பா

Back to Top
புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
9.026   புருடோத்தம நம்பி - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

9.026 புருடோத்தம நம்பி - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
வாரணி நறுமலர் வண்டு கெண்டு
   பஞ்சமம் செண்பக மாலை மாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
   வந்துவந் திவைநம்மை மயக்கு மாலோ
சீரணி மணிதிகழ் மாட மோங்கு
   தில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந் தஞ்சல் என்பார்
   ஆவியின் பரமன்றென்றன் ஆதரவே.

[1]
ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
   அருவினை யேனைவிட் டம்ம அம்ம
பாவிவன் மனம்இது பைய வேபோய்ப்
   பனிமதிச் சடையரன் பால தாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
   நெஞ்சமும் தஞ்சமி லாமை யாலே
ஆவியின் வருத்தமி தார்அறிவார்
   அம்பலத் தருநடம்ஆடு வானே.

[2]
அம்பலத் தருநட மாடவேயும்
   யாதுகொல் விளைவதென் றஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே
   ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைப் பூதஞ் சூழ
   வானவர் கணங்களை மாற்றி யாங்கே
என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
   எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே.

[3]
எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே
   ஏதமில் முனிவரோ டெழுந்த ஞானக்
கொழுந்தது வாகிய கூத்த னேநின்
   குழையணி காதினின் மாத்தி ரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
   செங்கனி வாயும்என் சிந்தை வௌவ
அழுந்தும்என் ஆருயிர்க் கென்செய் கேனோ
   அரும்புனல் அலமரும் சடையினானே.

[4]
அரும்புனல் அலமரும் சடையினானை
   அமரர்கள் அடிபணிந் தரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
   பேசவும் நையும்என் பேதை நெஞ்சம்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
   காரிகை யார்முன்பென் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
   தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.

[5]
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
   தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி
   என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பசுந்தலை யோடிடறிப்
   பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநட மாடில் எங்கள்
   ஆருயிர் காவல்இங் கரிது தானே. 

[6]
ஆருயிர் காவல்இங் கருமை யாலே
   அந்தணர் மதலைநின் னடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
   குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
   அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரே எங்கள் தில்லை வாணா
   சேயிழை யார்க்கினி வாழ்வரிதே. 

[7]
சேயிழை யார்க்கினி வாழ்வரிது
   திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை யென்ற டைந்தேன்
   தனிமையை நினைகிலை சங்க ராஉன்
பாயிரும் புலியத ளின்னு டையும்
   பையமே லெடுத்தபொற் பாத முங்கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
   எங்களை ஆளுடை ஈசனேயோ. 

[8]
எங்களை ஆளுடை ஈசனேயோ
   இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப்
   பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
   திருச்சிற்றம் பலமுட னேபு குந்து
அங்குன பணிபல செய்து நாளும்
   அருள்பெறின் அகலிடத் திருக்க லாமே. 

[9]
அருள்பெறின் அகலிடத் திருக்க லாமென்
   றமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடை யாரின் மிக்கார்
   ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழியு மையாள்
   கணவனை வல்வினை யாட்டி யேன்நான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
   ஆசையை அளவறுத் தார்இங் காரே. 

[10]
ஆசையை அளவறுத் தார்இங் காரே
   அம்பலத் தருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார்
   வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
   வண்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள்கொண் டேத்த வல்லார்
   மலைமகள் கணவனை யணைவர் தாமே. 

[11]

Back to Top
புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
9.027   புருடோத்தம நம்பி - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வானவர்கள் வேண்ட
   வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை
   ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையுந்
   தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே
   நாடகமே யாடுவரே. 

[1]
ஆடிவரும் காரரவும்
   ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவரு மாகண்டேன்
   தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமை யோர்பரவும்
   தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே
   நிற்கவுமே ஒட்டாரே. 

[2]
ஒட்டா வகைஅவுணர்
   முப்புரங்கள் ஒர்அம்பால்
பட்டாங் கழல்விழுங்க
   எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறைஒவாத்
   தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா நடமாடக்
   கோல்வளைகள் கொள்வாரே. 

[3]
ஆரே இவைபடுவார்
   ஐயம் கொளவந்து
போரேடி என்று
   புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத்
   தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை
   ஒக்கின்றார் காணீரே. 

[4]
காணீரே என்னுடைய
   கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத்
   தில்லைச்சிற் றம்பலவர்
பூணார் வனமுலைமேற்
   பூவம்பாற் காமவேள்
ஆணாடு கின்றவா
   கண்டும் அருளாரே. 

[5]
ஏயிவரே வானவர்க்கும்
   வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும்
   தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியஞ் சூடிய
   தில்லைச்சிற் றம்பலவர்
வாயின கேட்டறிவார்
   வையகத்தா ராவாரே. 

[6]
ஆவா இவர்தம் திருவடி
   கொண் டந்தகன்றன்
மூவா உடல்அவியக்
   கொன்றுகந்த முக்கண்ணர்
தேவாம் மறைபயிலும்
   தில்லைச்சிற் றம்பலவர்
கோவாய் இனவளைகள்
   கொள்வாரோ என்னையே. 

[7]
என்னை வலிவார்ஆர்
   என்ற இலங்கையர்கோன்
மன்னு முடிகள்
   நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித்
   தில்லைச்சிற் றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார்
   ஒவ்வார்இம் முத்தரே. 

[8]
முத்தர் முதுபகலே
   வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக
   என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும்
   தில்லைச்சிற் றம்பலவர்
கைத்தலங்கள் வீசிநின்
   றாடுங்கால் நோக்காரே. 

[9]
நோக்காத தன்மையால்
   நோக்கிலோம் யாம்என்று
மாற்காழி ஈந்து
   மலரோனை நிந்தித்துச்
சேக்கா தலித்தேறுந்
   தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந் தென்வளைகள்
   கொள்வாரோ ஒண்ணுதலீர். 

[10]
ஒண்ணுதலி காரணமா
   உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் றன்னைப்
   புருடோத் தமன்சொன்ன
பண்ணுதலைப் பத்தும்
   பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்
   கினிதா இருப்பாரே. 

[11]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool